LANKA HERMES

LANKAHERMES

Saturday, May 06, 2006

றஞ்சினி கவிதைகள்

நூல்: றஞ்சினி கவிதைகள்
வெளியீடு: இமேஜ் & இம்ப்ரெஷன் வெளியீடு, டிசம்பர் 2005
11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018
+91-44-24993448
uyirmai@yahoo.co.in
விலை: ரூ 40,-


புகைப்படம்: தமயந்தி,நோர்வே

"உன் முத்தங்களுக்காக என் உதடுகள் தவிக்கின்றன"


றஞ்சினியின் கவிதைகள் மிகத் துலக்கமானவை. உணர்வின் நேர்மையை மிக நிர்வாணமாகச் சொல்பவை. தமிழில் இவ்வாறான துணிச்சலான காதல் கவிதைகளின் வரவு மிக அரிதாகவே இருக்கின்றது. அறிவுரிமையின் பாசாங்குத்தனம் இல்லை. விடுதலை என்கிற கோசத்தனம் இல்லை. கவிதைகளும் அவை பிறந்த தூண்டல்களும்
விடுதலையேயாகி நிற்கின்றன. சில கவிதைகள் உணர்வின் அதியுச்ச வீச்சை வெளிப்படுத்துகின்ற அதேவேளை சில, வெறுமனே வசனத்தின் இடம்மாறிய சொற்களின் கூட்டாமாகவே இருக்கின்றன. „ இனிய நண்பனுக்கு“ என்ற கவிதை தொடக்கம் „ஓவியனுக்கு…“ என்ற கவிதை வரை இவரது இந்த முதலாவது தொகுப்பில் ஐம்பத்தியொரு கவிதைகள் இருக்கின்றன. புத்தி, அழகு, அறிவு அவற்றின் மீதான ஒரு ஆணின் அங்கீகாரம் என்பன எவ்வளவு அபத்தமானவை, பொய்யானவை, கோணலானவை என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறது இத் தொகுப்பு. மிகச் சாதாரணமான ; பேச்சு வழக்கின் பூரண சொற்களாக இருக்கும் இது போன்ற கவிதைகள் சில பல வேளைகளில் ஒரு திடீர் வெட்டில் நுண்தளப் புரிதலை வேண்டி நிற்கின்றன.


என் இனிய நண்பனே
நீ என்னை அறிந்ததாகக் கூறினாய்
எப்படி என்றேன்; ஆத்திரப்பட்டாய்
உன்னிடத்தில் – என்னைச் சமப்படுத்திப்
பார்த்தாய்
பின் பரவாயில்லை புத்திசாலி என்றாய்
அறிவென்றாய் – கூடவே அழகென்றாய்
எதை எதற்காகச் சொன்னாய்?
இல்லை
உன்னால் என்னை அறியமுடியவில்லை
பெண் என்பதைத் தவிர


சில இனிப்பான கவிதைகள்.

„…ஆடை களைந்து அரவம் போல பின்னிப் பிணைந்து
திரண்டு புரண்டு கலவியில் கலந்து இமயம் சென்று
கரைகிறது காலை…“

„என் ஜமேக்க காதலனுக்கு“ என்ற கவிதையில் கறுப்புக் காதலனிடம் அவள் சொக்கிக் கிடப்பது அழகிய கவிதையாகிக் கிடக்கிறது. ஜமேக்கப் பாடகர் பொப் மார்லியின் புகழ் பெற்ற பாடல்களில் தெரிகின்ற பிரபஞ்ச நோக்கினைத் தன் காதலனிடமும் கண்டு லயிப்பது அது பொப் மார்லியின் நிழல் உருவே என்றாகிறது.
"...முத்தமிடத் தூண்டும் உன் உதடுகள்
எனை வருடும் உன் திரண்ட தலைமுடி
என் தூக்கத்தைப் பறித்து விட்டது
...
உன் பாடல்கள் புரட்சியானது
...நான் கொண்ட காதல் வார்த்தைகளை மீறியது..."

உடனடிப் பார்வையில் இவை கவிதைகள் தானா என்று கேட்கத் தோன்றும் போல் இருந்தாலும் அவை சொல்கின்ற விடயங்கள் தமிழுக்குப் புதியவை. கவிஞனை; கலைஞனை; ஓவியனை; பாடகனை; நண்பனை; புரட்சியாளனை; விடுதலையை நேசிப்பவனை கனிவிதயம் கொண்டு விரும்பி நிற்கும் கலைமனக் கவிதைகள் இத் தொகுப்பில் பல உண்டு. இவர்களிடமிருந்து "...அன்பை எடுக்கவும் அன்பைக் கொடுக்கவும் எமக்கிருக்கும் உரிமை பறிபோகாதவரை நாம் காதல் செய்வோம்." என்று அன்புமனம் காட்டி அனணத்து நிற்கின்றன. அன்பும் காதலும் கூடலும் வருடலும் இனிமையானவை தான். அதனால் பல பிரிதலின் துயிர் வாட்டி எடுப்பினும் அதன் யதார்த்த நிலையினைப் பல கவிதைகள் பேசுகின்றன. "...உனது நெருக்கம் எனக்குத் தேவையாக உள்ளது ஆனாலும் என் அறிவு எம்மைப் பிரிக்கிறது." பண்பட்ட நவீனத்தின் பெண்மனப் படிமங்கள் இப்படி வெளிப்படுவது தமிழுலகுக்கு முற்றுலும் புதியது.
இவை எல்லாமே ஆசிய மனங்களின் போலி வாழ்வின் பாவ்லாக்களை சாய்த்துவிடக்கூடியவை.

2 Comments:

  • //புத்தி, அழகு, அறிவு அவற்றின் மீதான ஒரு ஆணின் அங்கீகாரம் என்பன எவ்வளவு அபத்தமானவை,//

    இத் தொகுப்போடு சம்மந்தமற்று ஒன்று...
    புத்தியும் அறிவும் இரு வேறு சாமான்களா?? இது நாள் வரை அறியாமையில் போய்விட்டது.
    மாறுபடும் புள்ளிகளை விளக்க முடியுமாயின் --எமைப் போன்ற மொழி(அறி)விலிகள்-- தன்யனா(ளா?!)கி உய்வோம்.

    By Blogger ஒரு பொடிச்சி, At 21 June, 2006 04:55  

  • அன்பு பொடிச்சி
    உங்கள் வினாவல் கண்டு மகிழ்கிறேன். விரைவில் பதில் எழுதுகின்றேன்!நீண்டுவிட்டால் தனிப்பதிவாக இடுவேன்!
    நன்றி

    By Blogger செ.க.சித்தன், At 22 June, 2006 09:58  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home